நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், கொரோனா தடுப்பு பணிக்கு நிதி அகர்வால் நிதியுதவி

19.05.2021 12:13:55

கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை வழங்குமாறு தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திரைப்பிரபலங்கள் பலரும் முதல்வரை நேரில் சந்தித்தும், ஆன்லைன் மூலமாகவும் நிதியுதவி அளித்து வருகின்றனர். 

முன்னதாக நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம், நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய், இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், மோகன்ராஜா ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி இருந்தனர். 

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால் ஆகியோர் தலா ரூ.1 லட்சம் வழங்கி உள்ளனர். மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஊரடங்கால் வேலையின்றி தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக பெப்சி அமைப்புக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.