இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்

20.03.2023 00:28:55

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.

இதையடுத்து, இங்கிலாந்து அதிகாரிகள் தூதரக வளாகத்தில் புதிய தேசியக் கொடியை பறக்கவிட்டனர். இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் மத்திய அரசு தலைநகர் புதுடெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை அழைத்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய தூதரக வளாகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் இங்கிலாந்து அரசின் அலட்சியத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது.

தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வது மற்றும் வழக்கு தொடரும் வகையில் இங்கிலாந்து அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.