இந்து சமுத்திரத்தில் மீன்பிடி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் - மாலைதீவு தூதுவர் கலந்துரையாடல்
கடற்றொழில் நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றை எதிர்கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் கலந்துரையடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் ஓமர் அப்துல் ரஷாக் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் இன்று (13) மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டள்ளது.
குறிப்பாக இந்து சமுத்திரத்திற்கு அப்பாற்பட்ட நாடுககளில் இருந்து வருகின்ற பாரிய மீன்பிடிக் கலங்களினால் இந்து சமுத்திரத்தின் கடல் வளங்கள் எடுத்துச் செல்லப்படுவது தொடர்பாக இலங்கையின் நிலைப்பாட்டினை அறிந்து கொள்வதற்கான ஆர்வத்தினை இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் வெளிப்படுத்தினார்.
இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயம் தொடர்பாக இலங்கையும் கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்ததுடன், இந்து சமுத்திர நாடுகளுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்து பொதுவான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், குறித்த விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், கடற்றொழில் மற்றும் பருவகால - நன்னீர் மீன்பிடி போன்ற நீர் வேளாண்மை செயற்பாடுகளில் அனுபவங்களையும் தொழில் நுட்பங்களையும் இரண்டு நாடுகளிடையே பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பயிற்சி செயற்பாடுளை மேற்கொள்ளுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.